வெள்ளி, 7 மார்ச், 2014

அப்பா - முதல் கதாநயாகன்:


அப்பா நமக்கு உயிர் கொடுத்தவர். அம்மா இடுப்பில் வைத்து நமக்கு உறவுகளை அறிமுக படுத்தும் போது, அப்பா தன் தோளில் தூக்கி வைத்து நமக்கு உலகினை காட்டியவர். குழந்தை பருவத்தில் நடை பழகி கொடுத்தவர், சிறு வயதில் நீச்சல் கற்று கொடுத்தவர் பிறகு வாழ்க்கையில் எதிர் நீச்சல் அடிக்க கற்று கொடுத்தவர். பண்டிகை காலத்தில் நமக்கு வித விதமாக துணி மணிகள் எடுத்து கொடுத்து, அவர் பழைய வேஷ்டியை கட்டியவர். சில சமயம் சண்டை போட்டாலும், நாம் தூங்கிய பிறகு பிள்ளை சாப்பிட்டானா என்று விசாரித்து நம்மை வருடி கொடுப்பவர். மகனிடம் தோற்பதை லட்சியமாக கொண்டவர்.

சில குடும்பங்களில் மனைவி இழந்த பிறகு, அப்பா மறுமணம் செய்யாமல் பிள்ளைகளை அடை காக்கும் சேவலாக வாழ்கின்றனர். அப்பா பலருக்கு. ஒரு அன்னையாக, தோழனாக, வழி காட்டியாக இருப்பவர். நமது படிப்பு, வேலை மற்றும் திருமணத்திற்காக (குறிப்பாக மகளின் திருமணம்) பல இன்னல்களை சந்தித்து நம்மை சிகரத்தில் வைத்தவர். அப்பாவின் மறைவிற்கு பிறகு, எத்தனை பேர் நானிருக்கிறேன்...பார்த்து கொள்வேன் என்று சொன்னாலும், அப்பாவிற்கு ஈடாகுமா????

ஒரு விவாசாயியாக, நெசவாளியாக, கூலி தொழிலாளியாக, மெக்கானிக்காக, டிரைவராக, வாட்ச்மேனாக, ஆசிரியாராக, குமாஸ்தாவாக, மேலாளராக என்று எதாவது ஒரு வேலை பார்த்து நமது குடும்பத்திற்காக அயாரது உழைப்பவர். குடும்ப பாரம் என்ற சிலுவைகளை இவர் சுமந்து நமது சிரமத்தை போக்கியவர். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக....தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். பாவம், இந்த அப்பாவி(ன்) வாழ்க்கை.

தகப்பன்கள் சிலுவைகளில் அறைய படாத கர்த்தர்களாக வாழ்கின்றனர். லவ் யூ பா

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தேடல்


மனிதனாக பிறந்த நாம் அனைவரும் வாழ்க்கையில் எதையாவது ஒன்றை தேடி கொண்டிருக்கிறோம். உதாரனமாக படிப்பதற்கு நல்ல கல்லூரியை தேடுகிறோம், படித்தவுடன் வேலையை தேடுகிறோம், வேலையில் சேர்ந்தவுடன் பொருளை தேடுகிறோம், கொஞ்சம் பொருள் கிடைத்தவுடன் வரன் தேடுகிறோம், திருமணதிற்கு பிறகு நிம்மதியை தேடுகிறோம்  இறுதியில் ஆன்மீக தேடலுடன் வாழ்க்கை முற்று பெறுகிறது.

தேடல் இல்லாத வாழ்க்கை தேங்கி போன குட்டை மாதிரி. நீங்களும் கிணற்றில் போட்ட கல்லு போல ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். அப்பாடி இது வரை படிச்ச படிப்பு போதும், சேர்த்து வச்ச காசு போதும் என்று இருந்து விடாதீர்கள். மேற்கொண்டு அறிவையும் பொருளையும் தேடி கொண்டிருங்கள் மேலும் அதனை மற்றவருக்கு பயன்படும் படி செய்யுங்கள். சும்மா இருக்காதீங்க.....அப்படி சும்மா இருந்த கூட, கூகிள் சென்று நல்ல விஷயமா தேடி பாருங்கள் 

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்று வைரமுத்து சொல்லி இருக்காரு.

வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது

ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது



தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்

தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்


ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே

(இன்னிசை பாடி வரும்....)

எஸ். ரெங்க ராஜன்

கொசுறு : உணர்ச்சிவசப்பட்டு இந்த பாட்டை சத்தம் போட்டு பாடாதீங்க. பின்ன சிம்ரன் மாதிரி யாராச்சு ஓடி வந்து நீங்க குட்டியா, உங்க பேறு குட்டியா என்று கேட்டுற போறாங்க 

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

காதலர் தினம்

நாள் நெருங்கி விட்டது...எப்படியாவது என் காதலை அவளிடம் தெரிவித்து விட வேண்டும். பதிலுக்கு என்ன சொல்லுவா என்று தெரிய வில்லை. காதல் ஒன்றும் எனக்கு புதிதல்ல, ஆடோகிராப் சேரன் மாதிரி இரண்டு மூன்று பெண்களிடம் காதல் வயப்பட்டு பிறகு எல்லாம் ஊற்றி கொண்டது. அதற்கு பிறகு காதலே வேண்டாமென்று முடிவெடுத்து விட்டேன். காதல் என்றால் தீண்டாமை போல ஒரு பெருங்குற்றம், பாவம் மற்றும் மனித தன்மையற்ற செயல் என்று ஒதுங்கி இருந்தேன். ஆனால் தற்சமயம், காதல் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது. அந்த பெண்ணை தினமும் சந்திக்கிறேன்..எங்க ஏரியா தான். அந்த பெண்ணை காதலித்தாலும் வாயை திறந்து நான் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னது கிடையாது. எத்தனை நாள் தான் நடிகர் முரளி மாதிரி காதலை சொல்லாமல் இருப்பது, இந்த காதலர் தினத்தில் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.

இன்று காலையில் அவளை பார்த்து எனது விருப்பத்தை சொல்லி விட்டேன். அதற்கு அவளின் ரியாக்சன் என்னவென்றால்....ஸ்ஸ் யப்பா இது என்ன புதுசா இருக்கு, எனக்கு நெறைய வேல கிடக்கு...அடுப்புல சாதம் வச்சுருக்கேன், உங்க அழுக்கு துணிய முக்கி வச்சுருக்கேன் பிறகு துவைக்கணும், இன்னைக்கு வேற வெள்ளி கிழமை (14.02.2014) வீடு வாசல் கழுவி எடுக்கணும். உங்களுக்கு குளிக்க வேற வெந்நீர் போடணும்...இப்ப வேற நீங்க காமெடி பண்ணிக்கிட்டு இருக்காதிங்க. ஆபிசுக்கு லேட் ஆகிடுச்சு..போயி சீக்கிரம் கிளம்புங்க ராசா என்று சொல்லி விட்டு ஒரு புன்சிரிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறாள். நான் சொல்ல வேண்டிய காதலை அவள் செயலினால் உணர்த்துகிறாள். பொதுவா மனைவி தான் ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் குழந்தை - இரண்டாம் தாய் - கடைசி காதலி 

புதுசா காதலிக்கிறவங்களுக்கு தான் பாஸ்...வருசத்துக்கு ஒருமுறை காதலர் தினம் வருகிறது, கல்யாணம் ஆனவங்களுக்கு வருசமெல்லாம் காதலர் தினம் தான். ஸோ..லவ் யூ டி மை பொண்டாட்டி.

ஒரு தகப்பன் போல இருப்பேன்
ஒரு தாய போலவும் இருப்பேன்
உன் நண்பன் போல நடப்பேன்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்

வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன், தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி




வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஹெட்ஸ் ஆப் தொப்பி மேன்

பொதுவாக யாரவது வியத்தகு சாதனை செய்துவிட்டால் அதனை பார்ப்பவர்கள் உடனே தான் அணிந்திருக்கும் தொப்பியை (Hat) கழற்றி சிரம் தாழ்த்தி வாழ்த்து சொல்லுவார்கள். தொப்பி போடாத பார்வையாளர்கள் ஹெட்ஸ் ஆப் (Hats off) என்று கூறி வாழ்த்துவார்கள். அந்த தொப்பியை தனது மகுடமாக அணிந்திருக்கும் பாலு மகேந்திரா இன்று காலமாகி விட்டார். ஒரு ஒளிப்பதிவாளராக வாழ்க்கையை தொடங்கி, இயக்குனராக வலம் வந்து, இறுதியாக நடிகராக (தலைமுறைகள்) வெற்றி வாகை சூடியவர். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவர் இயக்கத்தில் "நீங்கள் கேட்டவை" படத்திலிருந்து "கனவு காணும் வாழ்க்கை யாவும்" பாடல் வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிப்பதாக இருக்கும்.

கனவு காணும் வாழ்க்கை யாவும் 
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று 

கரையைத் தேடும் ஓடங்கள்

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன?
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன?
கனவுகள் வாங்கும் பை தானே

(கனவு காணும் வாழ்க்கை யாவும்...) 

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்

(கனவு காணும் வாழ்க்கை யாவும்...)

திங்கள், 10 பிப்ரவரி, 2014

நையாண்டி - பகுதி 5

தமிழில் அணியிலக்கணம் என்ற ஒரு பாடம் இருக்கிறது. அதில் தற்குறிபேற்ற அணி, உருவக அணி, வஞ்ச புகழ்ச்சி அணி மற்றும் பல அணிகள் இருக்கின்றன. இந்த அணிகளை பற்றி எடுத்துரைக்க பழைய சங்க கால பாடல்களை உதாரனமாக சொல்லி கொடுப்பார்கள். அந்த வகையில் தற்குறிபேற்ற அணி தெரிந்து கொள்ள கீழ்கண்ட சிலப்பதிகார பாடலை கூறுவார்கள்.

"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட" 


அதாவது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை கூறுவது தற்குறிபேற்ற அணியாகும். சிலப்பதிகாரத்தில் கோவலன் மதுரை மாநகரில் கொல்லபடுவான் என்று முன்னே அறிந்த கவிஞர் (இளங்கோவடிகள்), தோரண வாயிற் கொடிகளின் இலைகள் இயல்பாக அசைவதை "கோவலனை இங்கு வர வேண்டாம்" என்று மறித்து காட்டுவதாக கூறியிருப்பார். அதுபோல, மிதிலை நகரத்தில் உச்சியில் பறந்த கொடிகள் இராமனை அழைப்பது, கைகளை நீட்டி வருக வருக என்று கம்பரும் இராமாயணத்தில் கூறி இருப்பார் (பாடல் சரியாக தெரிய வில்லை)

கம்பரோ இல்லை இளங்கோவடிகள் கூறிய இலக்கியம் சார்ந்த பாடல்களை மனதில் வைத்து கொள்ள கடினமாக இருக்கலாம். அதற்கு பதிலாக எளிமையான உதாரணங்களை கூறினால் மனதில் சுலபமாக புரிந்து கொள்ளலாம். உதாரனமாக பின்வரும் வாக்கியத்தை கவனிக்கவும்.

உனது பிரிவை நேற்று இரவு புற்களிடம் கூறினேன்
மறுநாள் காலை அவைகளும் கண்ணீர் வடித்திருந்தன.


தலைவியை பிரிந்த தலைவன் தனது தவிப்பை தோட்டத்தில் உள்ள புற்களிடம் கூற, மறுநாள் காலையில் அவைகள் கண்ணீர் வடித்தது. இயல்பாக புற்களின் மேலிருக்கும் பனித்துளியை...கண்ணீராக நினைத்து ஒப்பிடுகிறேன். மேலும் இதையும் விட எளிமையாக மற்றும் இனிமையாக ராஜபார்வை திரைப்பட பாடலில் கேட்டிருக்கிறேன்.

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.


இது தவிர நம் அன்றாட வாழ்கையில் அணியிலக்கனத்தை காண முடிகிறது. இங்கே மதுரையில் அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் பிலக்ஸ்சில் பார்க்கலாம். கட்சியில் ஸ்டாலின் ஆதிக்கத்தால் அமைதியாய் இருக்கும் அழகிரியை பார்த்து அவரின் ஆதரவாளர்கள் "முகிலை கிழித்து வெளியே வா முழுமதியே" என்றும், அவரின் பிறந்த நாளன்று "மதுரா என்றால் கண்ணன்....மதுரை என்றால் அண்ணன்" என்றும் சொல்வதில் உருவக அணி மற்றும் உவமேய அணிகளை காணலாம். அது போல, சோனியா காந்தியை பார்த்து மணிமேகலை என்று கலைஞரும், சிறையில் இருந்து வெளிவந்த கனி மொழியை பார்த்து "நீ பூங்கொடி அல்ல போர்க்கொடி" என்றும், பிரமேலதா விஜயகாந்தை "தென்னாட்டு ஜான்சி ராணி" என்றும் கழக உடன் பிறப்புகள் சொல்வதெல்லாம் இதற்கு சான்றாகும். மேலும் விஜயகாந்தை கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் கருப்பு ஞாயிறு என குறிப்பிடுவது "இல் பொருள் உவமை அணியை" குறிக்கிறது.

அது தவிர இந்த வஞ்ச புகழ்ச்சி அணியை பரவலாக கேட்கலாம். நம்ம சும்மா பாடின போதும், மாப்ளே உன் வாய்ஸ் அப்படியே யேசுதாஸ் மாதிரியே இருக்குதுனு அள்ளி விடுவாங்க. பொதுவாக அலுவகத்தில், தல கலக்கிடீங்க....உங்கள மாதிரி முடியுமா...சான்சே இல்லைனு புகழுற மாதிரி இகழ்வார்கள். இவ்வாறாக அணியிலக்கனத்தை அன்றாட வாழ்வில் காணலாம்.

(புலிகேசி மற்றும் அமைச்சரின் நையாண்டி)

புலிகேசி: அமைச்சரே, தமிழ் இலக்கணத்தில் அடுக்கு தொடர் மற்றும் இரட்டை கிளவி பற்றி உமக்கு தெரியுமா?

அமைச்சர்: மன்னா, நீங்கள் சொல்லும் இந்த சொற்றடரில் இரண்டு சொற்கள் அடுத்தடுத்து வரும். அவற்றுள் அடுக்கு தொடர் பிரித்தால் பொருள் தரும் (வாழ்க...வாழ்க) ஆனால் இரட்டை கிளவி பிரித்தால் பொருள் தராது (சல..சல)

புலிகேசி: பரவாயில்லை மிக சரியாக சொன்னீர். அணியிலக்கணம் போல இந்த வாக்கியங்களையும் நாம் அன்றாட வாழ்விலும் பயன் படுத்துகிறோம். குறிப்பாக இல்லத்தரசிகளின் கோரிக்கைகள் அடுக்கு தொடராக இருக்கின்றன....ஆனால் ஆனந்த மஞ்சத்தில் மட்டும் அர்த்தமற்ற இரட்டை கிளவியாக இருக்கின்றன


அமைச்சர்: பலே மன்னா..அது மட்டுமல்ல, இங்கு நீங்கள் செய்யும் அக்கபோறினால் அரண்மனை கோஷங்கள் எல்லாம் அடுக்கு தொடராகவும்...அந்தபுர விஷமங்கள் எல்லாம் இரட்டை கிளவியாக தான் ஒலிக்கின்றன.

காவலன்: மன்னா..தங்களை காண புலவர் பாணபத்திர கோணாண்டி வந்துள்ளார். 

அமைச்சர் : மன்னா...தங்களை பற்றி ஏற்கனவே பாட வந்த பாணபத்திர ஓணாண்டி-யை போல தற்போது அவரது தம்பி வேறு பாடலுடன் உங்களை பாடி மகிழ்வித்து பொற்கிழி வாங்க வந்திருகிறார். வர சொல்லுங்கள். 

(புலவரின் பாடலும்...மன்னரின் கோபமும் அடுத்து வரும் நையாண்டி தொடரில்)

கொசுறு : 80-களில் வந்த கில்மா பாடல்களில் இரட்டை கிளவி சொற்களை கேக்கலாம்.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

குக்கூ இன் தி குரோ நெஸ்ட்

இசையால் வசமாகா உலகமேது என்று டி.எம்.ஸ் அவர்கள் பாடியது போல, பரபரப்பான இந்த இயந்திர வாழ்க்கையில் நமக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தருவது இசை தான். இசை, மொழி நாடு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ரசிக்க கூடியது. இங்கு நம் தமிழகத்தில், வேற்று மொழியை சேர்ந்த பாடகர்கள் முத்திரை பதித்து வருகின்றனர். வட மாநிலத்தில் இருந்து வந்து, நம் கூட்டில் பாடும் கான குயில்கள் உதித் நாராயண் மற்றும் சாதனா சர்கம் பற்றி ஒரு பதிவு. இவர்கள் ஹிந்தியில் பின்னணி பாடல்கள் பாட ஆரம்பித்து, இங்கு தென்னகத்தில் முன்னணியாக திகழ்கின்றனர்.

உதித் நாராயண் இந்தி, உருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா மற்றும் , அஸ்ஸாமி மொழித் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியிருக்கிறார். உதித், இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை பெற்றவர். இவர் முதன் முதலாக தமிழில் காதலன் திரைபடத்தில் "காதலிக்கும் பெண்ணின் கையை தொட்டு நீட்டினால்" என்ற பாடலை SBP உடன் சேர்ந்து பாடினார். பிறகு இவர் பாடிய குலுவாலிலே (முத்து), காசு மேல (காதலா காதலா), காதல் பிசாசே (ரன்), இத்துனுண்டு முத்தத்துல (தூள்) மற்றும் விஜய் பாடல்களான கொக்கர கொக்கரக்கோ, அட என்னத்த சொல்வேனுங்கோ, அச்சச்சோ புன்னகை, வாடி அம்மா ஜக்கம்மா போன்ற டப்பாங்குத்து பாடலை பாடி புகழ் பெற்றவர். 

அதை போல இவர் பாடிய மெலடி பாடலான சஹானா (சிவாஜி) மற்றும் எங்கேயோ பார்த்த மயக்கம் (யாரடி நீ மோகினி) போன்ற பாடல்கள் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக, எங்கேயோ பார்த்த மயக்கம் பாடலை அருமையாக பாடி கலக்கி இருப்பார். அந்த பாடல் வரிகளும் மற்றும் உதித் குரலும் நன்றாக இருக்கும் (இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே....) அந்த பாடலின் இசை, உதித் குரல், டீம் லீடராக வரும் நயன்தாரா தனுஷின் தவிப்பு, மழை காலம், சிறுவர்களுடன் தனுஷின் ஆட்டம் மிகவும் நன்றாக இருக்கும். அந்த நிலை அறிவை மயக்கும் மாய தாகம் போன்றது.

இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்

உதித் பாடும் போது ஒரு லயம் (sweetness) இருக்கும், உதரணமாக இந்த பாடலில் "மயக்கம்" என்று உச்சரிக்கும் போதும், காதல் பிசாசே பாடலில் "பரவாயில்லே" உச்சரிக்கும் போதும் அறியலாம். ஆனால் சில சமயம் அந்த உச்சரிப்பு ஏடாகூடமாக ஆனதுண்டு. பிரசாந்த் மற்றும் கரண் நடித்த ஒரு படத்தில் "ஈஸ்வரா வானும் மண்ணும்.." என்று வரும் பாடலின் இடையே, "பிரியமான பொண்ணை ரசிக்கலாம் தப்பில்லே" என்று பாடும் போது "பெரியமாவின் பொண்ணை......" என்பது போல அவர் உச்சரிப்பு அமைந்திருக்கும். பிறகு ரிரேகார்டிங் பண்ணி சற்று தெளிவாக பாட சொன்னார்களாம். (வாரமலர் எலிசா சொன்னதாக நியாபகம்)

*****

அடுத்த கானக்குயில் சாதனா சர்கம், இவரும் பல இந்திய மொழிகளில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி இருக்கிறார். ராஜா மற்றும் ரஹ்மான் அவர்களின் ஆஸ்தான பாடகி. அழகி படத்தில் இவர் பாடிய "பாட்டு சொல்லி பாட சொல்லி" என்ற பாடல் இவருக்கு தேசிய விருது வாங்கி தந்தது. இந்த பாடலில் ஒரு மெல்லிய சோகம், தவிப்பு....ராஜாவின் இசையில் நன்றாக பாடி இருப்பார். 

பிறகு அலைபாயுதே படத்தின் சிநேகிதனே பாடல் மூலம் மிகவும் புகழடைந்தார். ரஹ்மான் இசையில் அருமையாக பாடி இருப்பார். முதல் சரணத்தில் நாயகி தனது தேவையையும்...இரண்டாவது சரணத்தில் தன் சேவையையும் வெளிபடுத்துவார். வைரமுத்து வரிகளில் சாதனா அருமையாக பாடி இருப்பார். .ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவகம் செய்ய வேண்டும் (தேவை).....உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் (சேவை).

இவர் தனியாக பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. மேலே சொன்ன..பாட்டு சொல்லி, சிநேகிதனே மற்றும் மன்மதனே, கண்ணன் வரும் வேலை, கொஞ்சும் மைனாக்களே, அது தவிர இவர் பாடிய டூயட் பாடல்களும் கேட்க அருமையாக இருக்கும், SPB உடன் "சுவாசமே" (தெனாலி), ஜேசுதாசுடன் "நெஞ்சே நெஞ்சே" (ரட்சகன்), , சங்கர் மகாதேவனுடன் "குறுக்கு சிறுத்தவளே"(முதல்வன்), ஹரிகரனுடன் "தவமின்றி கிடைத்த வரமே" (அன்பு) என்று சொல்லி கொண்டே போகலாம். 

உதித் போல இவரது குரலிலும் ஒரு லயம் உண்டு. குறிப்பாக இவர் அய்யா என்று உச்சரிக்கும் போது கேட்க அருமையாக இருக்கும்.

முதல்வன் படத்தில் குறுக்கு சிறுத்தவளே பாடலில்

உசிர் என்னோட இருக்கையிலே நீ மண்ணோடு போவேதேங்கே
அட உன் ஜீவனில் நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூட குழம்புமாய்யா

பிறகு ஆயுத எழுத்து படத்தில் சண்டகோழி பாடலில், கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா அய்யா... யா.

அடுத்து நியு படத்தில் காலையில் தினமும் கண்விழித்தால் பாடலில், தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா. 

இறுதியாக ஐயா படத்தில் ஒரு வார்த்தை சொல்ல - பாடலில், 

நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதய்யா......வேப்ப மரம் சுத்தி வந்தேன் அரச மரமும் பூத்ததய்யா 

இந்த "ஒரு வார்த்தை" பாடல் தமிழ் நாட்டு இளைஞர்களை கொள்ளை அடித்த பாடல்....பாடலின் ஆரம்பத்தில் நாயகி செம்மண் பூமியில் சிகப்பு கலர் சேலை + குதிரை வால் சிகை அலங்காரம் செய்து, மூச்சிரைக்கை ஓடி வந்து....நாயகனை பார்த்து பரவசத்துடன் "ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்று பாடுவார். அதை பார்க்கும் போது, ஏதோ நாயகி நம்மை பார்த்து பாடுவதாக ஒரு மயக்கம். (அங்கே என்ன மாப்ளே சத்தம்......சும்மா பேசிகிட்டு இருக்கேன் மாமா). இந்த பாடலின் வெற்றிக்கு 100% கிரடிட் பாடகி மற்றும் நாயகிக்கு மட்டும் தான் வேணுமென்றால் பரத்வாஜ், ஹரி மற்றும் சரத் இவர்களுக்கு ௦0.1% கிரடிட் கொடுக்கலாம்.

உதித் பாடிய "ஈஸ்வரா" பாடலின் லயம் (பிரியமான பொண்ணை ரசிக்கலாம்) ஏடாகூடமாக ஆனது போல, சாதனா பாடிய ஒரு பாடலில் அவ்வாறு அமைந்ததுண்டு, பதிவின் நீளம் கருதி நீக்கி விட்டேன் (எஸ்கேப்). மொழி தெரியாமல் இவர்கள் சந்தர்பங்களை மட்டும் புரிந்து கொண்டு பாடுவது வியப்படைய செய்கிறது.

அது போல, வேற்று மொழி பிரிவை சார்ந்த TMS ஐயா (சௌராஷ்டிரா), SPB அவர்கள் (தெலுங்கு), ஜேசுதாஸ் அவர்கள் (மலையாளம்) மற்றும் பலர் தமிழ் மொழி பாடல்களை மிக அருமையாக பாடியவர்கள். இவர்கள் பாடிய பாடல்கள் நம் வாழ்வில் உள்ளத்தோடும், உயிரோடும் கலந்தவை. இவர்களை பற்றி சொல்ல இந்த பதிவு போதாது, ஒரு புத்தகமே எழுத வேண்டும். இசை என்பது மொழி மற்றும் நாடு கடந்து ரசிக்க படுவது. 

கொசுறு I : CSK பிராவோ (வெஸ்ட் இண்டிஸ்) நமது கானா பாலா உடன் சேர்ந்து உலா என்னும் படத்தில் பாட இருக்கிறார் 

கொசுறு II : ஜேசுதாஸ் பாடிய அனைத்து தமிழ் பாடல்களும் அருமையாக இருக்கும். அம்மா என்று அழைக்காத, கல்யாண தேனிலா...எவர் கிரீன் பாடல்கள். இவர் பாடிய ஆன்மீக பாடலான "ஹரிவராசனம் விஸ்வமோஹனம்" கேட்கும் போது எல்லா கவலைகளையும் மறந்து மன நிம்மதி கிடைக்கும். நிறைய பேர் இந்த பாடலை ரிங்/காலர் டோனாக வைத்திருப்பார்கள். சபரிமலை ஐயப்ப சாமி கோவில் நடை சாத்தப்படும் போது இந்த பாடல் ஒலிபரப்படுகிறது. அது போல குருவாயூர் கிருஷ்ணன் மேல பக்தி கொண்டு ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் மெய் சிலிர்க்க வைக்கும். ஆனால் இவர் இந்த கோவிலுக்குள் சொல்வதற்கு கேரளா அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை. சபரிமலைக்கு கூட, மாலை அணிந்து இந்து என்ற அடையாளத்துடன் போக கட்டாய படுத்த பட்டார். பிறப்பால் கிருத்துவரான ஜேசுதாஸ் அவர்களுக்கு இந்து கோவில்களில் அனுமதி மறுப்பது கண்டனத்துக்குரியது. கேரள அரசிடம் குருவாயூர் கோவிலுக்கு செல்வதற்கு ஒரு சாவல் விடுத்தார். நீங்க என்னடா என்னை தடுப்பதற்கு, நான் கோவில் முன்பு பாடல் பாடுகிறேன், குருவாயூரப்பேனே எனக்கு தரிசணம் கொடுப்பார் என்று, ஆனால் அரசு இந்த விஷபரிட்சைக்கு சம்மதிக்கவில்லை. இது போன்ற ஆகம விதிகளை தகர்த்தெறிய வேண்டும். கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். வாலி சொன்ன வரிகள் தான் நியாபகத்திற்கு வருகிறது "சமயம் என்று பார்த்தால், கடவுள் கிடையாது" (கல்லை மட்டும் கண்டால்...தசாவதாரம்)

திங்கள், 27 ஜனவரி, 2014

திக் திக் திக்


எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தை செல்வத்திற்கு அது ஈடாகாது. ஆனால் சில பெற்றோர்கள் குழந்தைகள் நலனில், படிப்பில் மற்றும் அவர்கள் பாதுகாப்பில் அக்கறை எடுத்து கொள்வதில்லை. சமிபத்தில் குழந்தைகள் பற்றி வந்த திரைபடங்கள் தங்க மீன்கள், 6 மெழுகு வர்த்திகள் மற்றும் விடியும் முன். இந்த மாதிரி படங்கள் பொழுது போக்கிற்காக எடுக்க பட்ட திரைப்படங்கள் அல்ல...குழந்தைகளின் விழிப்புணர்விற்காக எடுக்க பட்ட படங்கள்.

தங்க மீன்கள் படத்தில் குழந்தைகளின் கல்வி, குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறன் (Capacity) மற்றும் அதற்கான சூழ்நிலை பற்றி எடுக்க பட்டது. இந்த படம் குழந்தைகளின் படிப்பு சம்பந்த பட்டது, இது சாதாரணமான விஷயம் தான். ஆனால் ஷ்யாம் நடித்த 6 மெழுகு வர்த்திகள் மற்றும் பூஜா நடித்த விடியும் முன் போன்ற படங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றி எடுக்க பட்ட படங்கள். இப்படியெல்லாம் நாட்டில் நடக்கிறது என்று பலருக்கும் தெரியாது. இந்த படங்களை பார்த்தால் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மேலே 
அதிக கவனம் செலுத்துவீர்கள். இது விமர்சனம் மட்டுமல்ல...ஒரு விழிப்புணர்வு பதிவு, முழுவதும் படியுங்கள்.

6 மெழுகு வர்த்திகள் : படம் பார்க்கின்ற உணர்வினை மறந்து ஒவ்வொரு காட்சியும் பதற வைத்து ஈரகுலை நடுங்க வைத்த படம். முதலில் படம் ஆரம்பித்து எட்டு நிமிடம் மட்டும் தான் சந்தோசம்....பிறகு அனைத்தும் சஸ்பென்ஸ் த்ரில்லர். ஷ்யாம் மற்றும் பூனம் தம்பதியரின் ஒரே மகனின் (கெளதம்) ஆறாவது பிறந்த நாளை கொண்டாடி விட்டு..கடற்கரைக்கு செல்கின்றனர். அங்கு கவன குறைவால் மகனை தொலைத்து விடுகின்றனர். குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் பெரிய நெட்வொர்காக செயல்படும் மாபியா கும்பல், ஷ்யாமின் மகனை கடத்தி ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடம் மாற்றுகிறது. மகனை தேடி ஒவ்வொரு மாநிலமாக சென்று நிறைய வில்லன்களுடன் மோதி உயிரை பணயம் வைத்து மகனை மீட்டெடுக்கிறார். ஷ்யாமிற்கு வாழ்நாளில் இந்த ஒரு படம் போதும்...அவரின் நடிப்பை பாராட்ட. மனிதர் குழந்தை மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார். முகம் கண்ணெல்லாம் வீங்கி பைத்திய காரனை போல வட மாநிலங்களில் மகனை தேடும் காட்சி நெகிழ செய்கிறது. 

மகனையும் தொலைத்து...அவனை தேடி சென்ற ஷ்யாம் பற்றி எந்த விபரம் தெரியாமல் மனைவி பூனம் தவித்து கொண்டிருப்பார்...அப்பொழுது ஷ்யாம் தொலைபேசியில் அழைக்கும் போது, பூனம் மனவேதனையுடன் ஷ்யாமிடம்...கௌதமும் இல்லாமல் நீயும் இல்லாமல் என்னால இருக்க முடியல, நீயாவது கிளம்பி வந்து விடு...உனக்கு எத்தனை பிள்ளை வேணாலும் பெத்து தரேன் என்பார் அதற்கு ஷ்யாம், கௌதம் இல்லாம, நாம வித விதமா துணிய கட்டிக்கிட்டு...நல்ல சாப்பிட்டு சந்தோசமா இருக்க சொல்றியா? என்று சொல்லிவிட்டு தேடுதல் வேட்டையை தொடர்வார். இறுதியாக கொல்கத்தாவில் மகனை தேடி செல்லும் ஒரு இடத்தில் அனைத்து மொழி பேசும் குழந்தைகள் அடைக்க பட்டிருப்பார்கள்..அவர்கள் அனைவரும் ஷ்யாமின் காலை பிடிச்சு கெஞ்சுவதை பார்க்கும் போது இதயம் ரணமாகி விடும். அங்கிருக்கும் மகனை அடையாளம் காண முடியாமல் (பல வில்லன்களிடம் மாட்டி சித்தரவதை செய்ய பட்ட ஷ்யாமின் மகன் ஆளே மாறி போயிருப்பான்....அது போல மகனை பல மாதமாக தேடி ஷ்யாமின் தோற்றமும் மாறி இருக்கும்) தவிக்கும் காட்சி...பிறகு மகனை அடையாளம் கண்டு அணைக்கும் காட்சி கண்ணில் நீரை வரவைத்து விடும்.

விடியும் முன் : மேலே சொன்ன படத்தில் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் போல, இந்த படத்தில் பாலியல் தொழிலில் சிறுமிகளை ஈடுபடுத்துவது மற்றும் அதிலிருந்து விடுபட முயலும் ஒரு சிறுமி (மாளவிகா மனிகுட்டன்) மற்றும் பாலியல் தொழிலாளி ரேகா (பூஜா), அவர்களை துரத்தும் மூன்று சமூக விரோத கும்பலிடம் இருந்து விடுபடுவது தான் கதை.

பாலாவின் பரதேசி படத்திற்கு கால்சீட் கொடுக்காமல், பூஜா இந்த படத்தில் சிறப்பான நடிப்பை தந்திருப்பார். படத்தில் பூஜாவை வைத்து முன்பு தொழில் செய்த ஒரு புரோக்கர், என்ன ரேகா (பூஜா) முன்ன மாதிரி இப்ப தொழில் செய்ய வரமாட்டுகிற என்று சொல்வார்...அதற்கு பூஜா, இல்ல சிங்காரம் இப்ப வயசாகிடுசுல்லா என்று விலகி செல்கிறார். பிறகு அந்த புரோக்கர் பூஜாவிடம், ஒரு பெரிய புள்ளிற்கு சிறுமியை ஏற்பாடு செய்ய சொல்கிறார். பூஜா சில நிர்பந்தத்தினால...தான் வேலை பார்த்த இன்னொரு புரோக்கர் துரை சிங்கம் என்பவனிடம் இருந்து சிறுமியை அழைத்து வந்து....பெரும்புள்ளிக்கு ஏற்பாடு செய்கிறார். இறுதியில் தான் செய்வது தவறு என்று உணர்ந்து அந்த சிறுமியை பெரும்புள்ளியிடம் இடமிருந்து காப்பாற்றும் தருணத்தில், அந்த சிறுமி மற்றும் பூஜா இருவரும் அந்த காமுகனை கொலை செய்து விட்டு தப்பி விடுகின்றனர். இந்த இருவரை பிடிக்க...சிங்காரம் குரூப், துரைசிங்கம் குரூப் மற்றும் பெரும்புள்ளியின் மகன் & அடியாட்கள் துரத்துகின்றனர். இறுதியில் கிளைமேக்ஸ் என்ன நடக்குமோ என்று நினைக்கையில் யாரும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் இனிதே முடிவடைகிறது.

6 மெழுகு வர்த்திகள் மற்றும் விடியும் முன், குழந்தைகளுக்கு எதிராக நிழல் உலகில் நடக்கும் கொடுமைகளை பற்றி கூறுகிறது. குழந்தைகளை பெற்று படிக்க வைத்தால் மட்டும் நம் கடமை முடிந்து விடாது...அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளிடம் தினமும் கொஞ்ச நேரம் செலவழியுங்கள். கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள் கூட குழந்தைகளை பார்த்து, அங்கே இங்கே நிக்காதே...பிள்ளை பிடிக்கிறவன் தூக்கிட்டு போயிருவான், யாரு எது கொடுத்தாலும் வாங்கி திங்காதே, பிறகு குறிப்பா பெண் குழந்தைகளை பார்த்து விளக்கேற்றும் நேரத்திற்குள் வீட்டிற்கு திரும்பி வந்து விடு....இந்த மாதிரி சாதாரண விசயங்களை கூட நகரத்தில் இருக்கும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு சொல்வதில்லை. நாட்டில் நடக்கும் விசயங்களை கொஞ்சம் நாசுக்காக கூறி விழிப்புரனர்வை ஏற்படுத்துங்கள். நாம் வசிக்கும் இடம், வீட்டின் விலாசம், அம்மா அப்பா மொபைல் நம்பர் போன்றவற்றை மறக்காமல் சொல்லி கொடுங்கள்

சில பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்த படுகிறார்கள். சும்மா ஸ்கூலுக்கு போனியா...ஹோம் வொர்க் பண்ணிட்டியா என்று மட்டும் கேக்காமல், அவர்களின் தேவை மற்றும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்று கேளுங்கள். மேலும் குழந்தைகளுக்கு தொடுகை பற்றி சொல்லி தாருங்கள், அதாவது குட் டச், பேட் டச் என்று கூறி கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க சொல்லுங்கள்....இது இச்சை கொண்டிருக்கும் சில வாலிப வயது நண்பர், உறவினர், ஆசிரியர் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் நபர்களிடமிருந்து கவனமாக இருக்க செய்யும்...குறிப்பாக சில கிழட்டு கபோதிகளிடமிருந்தும் கூட.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சரியான சட்டம் இயற்ற படவில்லை. டெல்லி மாணவி விசயத்தில் கூட...முதலில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என்று சொன்னார்கள். மேலும் குற்றம் புரிந்த இன்னொரு நபரின் வயதை காரணம் காட்டி...அவனை சிறுவன் என்று தண்டனை விலக்கு கொடுக்க பட்டது...பிறகு ஜுவனைல் சட்டம் பதினெட்டு வயதிலிருந்து...பதினாறு வயதாக குறைக்க பட்டு விடுபட்ட நபரையும் குற்றவாளியாக்க பட்டது. பிறகு நீதிபதி வர்மா கமிட்டி கூடி ஆலோசித்து கெமிக்கல் கேஷ்ட்ரேஷன் (வேதியல் முறையில் பாலியல் உறுப்புகளை செயலிழக்க செய்வது) தண்டனை பரிந்துரைக்க பட்டது....பிறகு அந்த தண்டனை நிராகரிக்க பட்டு, வெறும் ஆயுள் தண்டனையாக இருக்கிறது. பிறகு எப்படி குற்றங்கள் குறையும்...தவறு செய்யும் நபர்கள் எப்படி பயப்படுவார்கள். 

எதுக்குடா கெமிக்கல் கேஷ்ட்ரேஷன் சொல்றீங்க...இருக்கவே இருக்கு பிசிக்கல் கேஷ்ட்ரேஷன் (காயடிப்பு), கிராம புறங்களில் சில மிருகங்களுக்கு செய்ய படும் முறை. பின்னங்காலை தூக்கி கொண்டு நங்குன்னு நாலு அடி...அவ்வளவு தான், அது போல சில மனித மிருகங்களுக்கும் செய்ய வேண்டும் (உச்சா மட்டும் தான் இருக்க முடியும் வேறு ஒன்றும் முடியாது). இதை கேலியாக எடுத்து கொள்ள வேண்டாம். பாதிக்க பட்ட குழந்தைகளின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினரா இருந்து சிந்தித்து பாருங்கள். பதின்ம வயதிற்கு மேற்பட்ட பெண்ணுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனை கூட நம்மால் ஜீரணிக்க முடிய வில்லை...அதை விட என்ன நடக்கிறது என்று தெரியாத குழந்தைகளுக்கு பாலியல் கொடூரமாக பெனட்ரேசன் (வன்புணர்வு) செய்யபட்டு கொலை செய்ய பட்டால்...நம்மால் சும்மா இருக்க முடியுமா. 
பிசிக்கல் கேஷ்ட்ரேஷன் தான் சரியான தண்டனை. சென்ற வருடம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த புனிதா என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்ய பட்டு கொல்ல பட்டார். அவரை கெடுத்து கொன்ற அந்த காமுகன்...ஏற்கனேவே ஒரு கற்பழிப்பு புகாரில் சிக்கி இருக்கிறான். சட்டம் மட்டும் சரியாக தண்டனை கொடுத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுமா? மேலும் தவறு செய்ய நினைப்பவன் கூட பயந்து தவறு செய்ய மாட்டான்.

அரபு நாடுகளில் இருக்கும் சட்டங்கள் இங்கு அமல் படுத்த பட்டால் தான் குற்றங்கள் குறையும். மேலும் நாமும் குழந்தைகள் விசயத்தில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அது தவிர வேறு எங்காவது குழந்தைகள் சித்திரவதை மற்றும் வன்கொடுமை செய்ய படுவது தெரிந்தால் பின்வரும் சைல்டு ஹெல்ப் லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிய படுத்துங்கள். 1098, 022-2495 2610 & 022-2495 2611 (Head office), 044-2815 6098, 044-2815 8098 (Southern region)


6 மெழுகுவர்த்திகள் படத்தில்...ஷ்யாம் காலினை பிடிச்சு கெஞ்சும் அந்த குழந்தைகள் தான் ஞாபகத்தில் வருகிறது. பரபரப்பாக நகரில் நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தின் ஐநூறு அடி தூரத்தில் கூட ஒரு குடவுனில் குழந்தைகள் அடைக்க பட்டு சித்திரவதை செய்ய படலாம்.. அப்படி உங்கள் கண்களுக்கு தென்பட்டால்...தயவு செய்து சைல்டு ஹெல்ப் லைன் போன் செய்து சொல்லுங்கள்.

கொசுறு: பெற்றோர்களே...உங்க பெண்ணுங்கள கஜினி சூர்யா மாதிரி இருக்க சொல்லுங்க. கஜினி படத்தில் சூர்யா தன்னுடைய நிலையை (Short term memory loss) உணர்ந்து, தன்னையையும் காப்பாற்றி கொண்டு...வில்லனையும் பழி வாங்குவார். அது போல பெண்களும் சமூகத்தில் நிலவும் கொடுமைகளிலிருந்து தன்னை தானே காப்பாற்றி கொண்டு...பிறகு பள்ளி கல்லூரிக்கு போகட்டும் இல்ல வேலைக்கு போகட்டும்.

புதன், 22 ஜனவரி, 2014

நினைத்தாலே இனிக்கும் - பகுதி 4

எப்போதாவது அத்தி பூத்தாற்போல வரும் சில பாடல்கள் மனதை கொள்ளை அடித்து விடுகின்றன. அந்த வகையில் கமல் மற்றும் கமலினியின் காதல் மழையில்....வேட்டையாடு விளையாடு படத்தில் "பார்த்த முதல் நாளே" பாடல் - கணவன் மனைவி அன்பை மிக அருமையாக பாடலாசிரியர் தாமரை சொல்லி இருப்பார். இவர் பாடல் வரிகளில் ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழ் சொற்களை பயன்படுத்துவது சிறப்பு. 

இதில் வரும் "என் பதாகை தாங்கிய உன் முகம்" மற்றும் "உன் விழியில் வழியும் பிரியங்கள்" என்று அன்பின் புதிய பரிமாணங்களாக சொல்கிறார். மேலும் இந்த பாடலில் கணவன் மனைவி அன்பினை பற்றி கூறும் போது.....கணவன் மறந்த விசயங்களை மனைவி மீட்டெடுத்து வியப்பில் ஆழ்த்தி விடுவதாகவும் அதுபோல, கணவனும் மனைவியிடம் எதையும் கேட்கமால் அவளின விருப்பத்தை செய்ய முயலுவதை மிக இனிமையாக எழுதி இருப்பார். இறுதியாக கமல் விடை பெற்று செல்வது மற்றும் கதவோரம் நின்று கமலினி வழியனுப்பும் தருணம்....பாடல் கட்சிகளும் பாடல் வரிகளும் அருமையாக இருக்கும். பாடகர் : உன்னி மேனன் - பாம்பே ஜெய்ஸ்ரீ

எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.


போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சரியென்று சரியென்று உனைப் போகச் சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்



பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன்
காட்சி பிழை போலே

ஓரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழையானேன்

கொசுறு: பதாகை என்றால் கொடி என்ற பொருள். அதாவது நாயகியின் கொடி போன்ற உடலினை தாங்கி நிற்கும் நாயகனின் முகம்...அந்த நினைவுகள் என்றும் மறையாது என்று பொருள். அது என்னவோ..கமல் பட நாயகிகள் (விருமாண்டி அபிராமி, வே.விளையாடு கமலினி, அன்பே சிவம் கிரண், தசாவதாரம் அசின்....மற்றும் பலர்) அடுத்து தமிழ் சினிமாவில் காணாமல் போய் விடுகின்றனர்.

சனி, 18 ஜனவரி, 2014

நையாண்டி - பகுதி 4

தமிழ் மொழியில் சங்க கால இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், சிற்றுலக்கியங்கள் என்று ஏக பட்ட நூல்கள் இருக்கின்றன. இவற்றுள் நமக்கு வாழ்வியல் நெறிமுறைகளை இரண்டு அடியில் தெளிவாக எடுத்துரைப்பது திருக்குறள். சமிபத்தில் நான் படித்த திருக்குறள் (குறள்: 484 - அதிகாரம்: காலம் அறிதல்) 

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்


பொருள்: உலகத்தையே வென்று கைகொள்ள வேண்டுமானால் உரிய காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து அறிந்து செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு மிக நுட்பமான விசயங்களை இரண்டே வரியில் திருவள்ளுவர் சொல்வது மிகவும் சிறப்பானது. திருக்குறளின் அருமை உணர்ந்த இடைக்காடர் "கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ - என்று புகழ்ந்து பாடினார். இதில் ஒரு படி மேல சென்று ஔவையார் "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் - என்று புகழாரம் சூட்டுகிறார்.

திருக்குறளை புகழ்ந்து சொன்னால் மட்டும் போதுமா? அதன் பெருமையை பறைசாற்ற நமது தமிழகத்தில் ஒரு தமிழ் அறிஞர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவரின் முயற்சி மிகவும் பாராட்ட தக்கது. அந்த தலைவர் சொன்ன விஷயம் "நீதிமன்றங்களில் கீதை-குரான்-பைபிள் போன்ற நூல்களுக்கு பதிலாக திருக்குறளை வைத்து சத்திய பிரமாணம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறிய இந்த நிபந்தனை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த முது வயதில் கூட தொல்காப்பியத்திற்கும் உரை எழுதுகிறார். தமிழுக்கும் தமிழருக்காக வாழும் தலைவர் அவர்.

(முன்பு சொன்னது போல நையாண்டி பதிவுகளில் புலிகேசி மன்னர் வருகை தருகிறார். அவருக்கு துணையாக அடியேன் அமைச்சராக வலம் வருகிறேன்)

புலிகேசி: அமைச்சரே...நீர் சொன்ன அந்த தலைவர் யாரென்று எனக்கு தெரியும். அவரின் பேச்சை கேட்டு தான், திரை வானில் சிறகடித்து கொண்டிருந்த நான் இப்பொழுது சிறகொடிந்த பறவையாகி விட்டேன். நீர் சொன்ன அந்த தலைவரும் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதியுள்ளார் தெரியுமா?  

அமைச்சர்: ஆமாம் மன்னா..அது தவிர தனது தொண்டர்களை வள்ளுவர் சொன்னது போல வாழ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

புலிகேசி: சரி அமைச்சரே. திருக்குறளுக்கு உரை எழுதியவர் அறத்து பாலில் பதினைந்தாவது அதிகாரத்தை (பிறனில் விழையாமை) மறந்து விட்டாரா?

அமைச்சர்: மன்னா...தாங்கள் சொல்வது ஒன்றும் புரிய வில்லையே..

புலிகேசி: அமைச்சரே...நீர் மணிக்கு ஒருமுறை மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து கொண்டு இருக்கிறீர். நாடகம் நடிக்க வந்த அடுத்தவரின் மனைவியை தனது துணைவியாராக வைத்து கொண்ட தலைவர்....ப்படி "பிறனில் விழையாமை" (பிறரின் மனைவியை விரும்பாமை) என்ற அதிகாரத்திற்கு தெளிவுரை எழுதி இருப்பார். மேலும் வள்ளுவர் சொல்படி வாழ வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் சொல்வது சற்று நகைப்புக்குரியதாக இருக்கிறது.

அமைச்சர்: ஒருவேளை தனது அதிகாரத்தால் அவர் அந்த அதிகாரத்தையே மறந்திருக்கலாம். விடுங்கள் மன்னா...இன்று உயர் பதவியில் இருக்கும் சில அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் குறிப்பாக சில காக்கி சட்டை போட்ட மச்சான்களும், சில நடிகர்களும் "அடுத்தவர் பட்டா போட்ட இடங்களிள் தான் கொட்டா போடுகிறார்கள்".

புலிகேசி: அமைச்சரே, அந்தரங்கம்...அந்தரங்கமாக இருந்தால் பிரச்சனை இல்லை. அது அம்பல படுத்த பட்டால் தான் பிரச்சனை. ஒரு சாமியார் இன்னொரு திருமணம் முடிந்த நடிகையுடன் ரகசியமாக இருந்தது அம்பல படுத்த பட்டது. ஒரு தலைவர் அல்லது சாமியார், சாமானியராக இருந்தால் பிரச்சனை இல்லை. தவறு செய்யும் அவர்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் பொழுது தான் அவரின் அந்தரங்கம் மக்களால் விமர்சிக்க படுகிறது. 

அமைச்சர்: இங்கு நாட்டில் பல அந்தரங்கங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. ஒரு சில அந்தரங்க விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்து விடுகின்றது. ஆனால் பலரும் தங்களின் அந்தரங்களை மறந்து....மற்றவரின் அந்தரங்கத்தை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். மேலும் அம்பலமான சிலரின் அந்தரங்கம் பற்றி விவாதிக்கும் பல நபர்களின் (so called people) அந்தரங்கம் என்பது......யாருக்கும் தெரியாமல் அவர்கள் நிறைவேற்றி கொண்டதாக இருக்கும் அல்லது அவர்களின் நிறைவேறாத ஆசையாக இருக்கும்.

புலிகேசி: ஆமாம் அமைச்சரே...பல லகுட பாண்டியர்கள்கள் தாங்கள் செய்த தவறை மறந்து மற்றவரின் தவறுகளை விமர்சிக்கிறார்கள். தவறு செய்பவர்களுக்கு உடனே சரியான தண்டனை கிடைப்பதில்லை. மற்றவரின் உடமைகளை அபகரிப்பவர்கள் தற்பொழுது வேண்டுமானால் சந்தோசத்துடன் இருக்காலம். ஆனால் பிற்காலத்தில் மிகவும் கஷ்டபடுவார்கள் என்று அதர்வண வேதத்தில் சொல்ல பட்டிருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் அமைச்சரே...நீங்கள் எப்படி?

அமைச்சர்: மன்னா...ஐயம் வேண்டாம். நான் ஏகபத்தின விரதன். பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடந்து செல்கிறேன். தாங்கள் என்னை அந்தபுரம் பக்கம் அனுமதிப்பதில்லை. அதற்கு மேல என் மனைவி, சமிபத்தில் தொலைகாட்சியில்...நீங்கள் கைபிள்ளையாக இருந்த சங்கத்தின் (வ.வா.சங்கம்) பெயரில் வெளிவந்த திரைப்படம் பொங்கலன்று ஒளிபரப்ப பட்டது. படத்தில் ஒரு பாடல் காட்சியை உன்னிப்பாக பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனது மனைவி "ஏங்க இங்க பாருங்க" என்று மூன்று முறை சொன்னது கவனிக்காமல பாடலில் நாயகி "பார்க்காதே பார்க்காதே...அய்யயோ பார்க்காதே" என்பதை கவனித்து கொண்டிருந்தேன். விளைவு இங்கே பாருங்கள்...முகம் கொழுக்கட்டை மாதிரி வீங்கி இருக்கிறது. வள்ளுவராவது ரெண்டு அடியில் (குறள்) சொல்லி புரிய வைப்பார்....ஆனால் மனைவியோ ஒரே அடியில் புரிய வைத்து விட்டார். இருக்கட்டும் மன்னா...உங்களின் கனவு கன்னி நயன்தாரா என்ன ஆனார்.

புலிகேசி: அமைச்சரே...நான் தலை நகரத்தில் கூறியது போல (என் அடுத்த டார்கெட் நயன்தாரா) அவரிடம் சென்று எனது விருப்பத்தை சொன்னேன். ஆனால் இந்த சிம்பு என்ற ஒரு சிறுவன் அடிக்கடி வம்பு செய்து கொண்டிருக்கிறான். சரி அடுத்து திரிஷாவை தேடி சென்றேன். அவரை இங்கு தமிழகத்தில் காணவில்லை. இப்பொழுது வெங்காயத்திற்கு இருக்கும் மார்க்கட் கூட திரிஷாவிற்கு இங்கு இல்லை. பிறகு ஒரு வழியாக அவரை ஆந்திராவில் பார்த்து விட்டு எனது விருப்பத்தை தெரிவித்தேன். ஆனால் திரிஷா என்ன பார்த்து நீ "வேணா" என்று கூறி விட்டு "ராணா" என்ற நடிகரிடம் தஞ்சம் அடைந்துள்ளார். 

அமைச்சர்: விடுங்கள் மன்னா...நீங்கள் கூறியது போல திரிஷா இல்லாவிடில் திவ்யா இருக்கிறாரே. நான் மேலே சொன்ன நமது சங்கத்தின் பெயரில் வந்த படத்தின் நாயகி பெயர் கூட திவ்யா தான் (ஸ்ரீ திவ்யா). இந்த முறை அவரின் தந்தையை அணுகி உங்களின் விருப்பத்தை கூறி சுயவரத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.

புலிகேசி: அமைச்சரே...உங்களின் எண்ணமும் செயலும் அப்படியே என்னை போலவே இருக்கிறது. ஆனால் திவ்யா-வின் தந்தை யாரென்று தெரியவில்லையே. சரி நானே திவ்யாவிடம் கேட்டு விடுகிறேன்.

ஊதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்
நீ சொல்லடி நான் அவனுக்கு சலாம் போடணும்.

திங்கள், 13 ஜனவரி, 2014

ஆட்டோகிராப்

இது சற்று நீளமான பதிவு....படித்த முடித்த உடன் நீங்களும் எழுத ஆரம்பித்து விடுவீர்கள்.

நம் வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்வில், நாம் அறிந்து கொண்ட விஷயம்...நாம் பார்த்து ரசித்தது...நம் மனதில் தோன்றும் சிந்தனைகள் போன்று பலவற்றை நம்முடைய மன பெட்டகத்தில் பூட்டி நியாபக படுத்தி கொள்ள முடியாது. அப்படியே நியாபக படுத்தினாலும் சில நாட்கள் கழித்து அந்த நினைவுகள் மறக்கடிக்க பட்டிருக்கும். திரும்ப மீட்டெடுப்பது கடினம். அந்த நினைவுகள்...மனதில் தோன்றும் சிந்தனைகள் மறக்காமலிருக்க குறிப்புகளாக எழுதி வைத்து கொண்டால் எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பி பார்க்கலாம். "எழுதாத கணக்கு அழுதாலும் தீராது" என்று கிராம புறத்தில் சொல்வார்கள். அந்த வகையில் எனது மனதில் தோன்றிய விஷயங்களை கிறுக்கல்களாக எழுதி வருகிறேன். 

எண்ணத்தில் தோன்றியதை ஏட்டில் எழுத ஆரம்பியுங்கள். எதை பற்றி எழுதுவது என்று யோசிக்க வேண்டாம். The "funny thing you write" is better than the "best thing you did not write". நமது அன்றாட வாழ்வில் நடக்கும் விசயங்களிலே நிறைய நகைசுவை இருக்கும். மற்றும் நீங்கள் ரசித்த காட்சிகள், அரசியல், ஆன்மீகம், பகுத்தறிவு, சமுக பிரச்சனைகள், மொழி, கலாச்சாரம், இயற்கை போன்றவற்றை பற்றி உங்கள் மனதில் தோன்றுவதை எழுதலாம். நீங்கள் இந்த மாதிரி எழுதும் விஷயங்கள் ஏற்கனவே விவாதிக்க பட்டது...இதில் புதுசா நாம் என்ன சொல்லிவிட போகிறோம் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் தனி தனி பெர்ஷேப்சன் (perception) இருக்கும்....நீங்களும் உங்கள் மனதில் தோன்றிய தனித்துவமான உங்களின் பார்வையை பதிவு செய்யலாம். 

பொதுவாக எழுத்துலகில் அனைவரும் தருமி தான். கடவுள் எழுதி கொடுத்த பாட்டை தான் பாடி கொண்டிருக்கின்றனர். (எழுத்தறிவித்தவன் இறைவன்). எவரும் புதியதாக பாடவில்லை. என்ன கொஞ்சம் பொருள் புரிந்து பாட வேண்டும். அரிவை கூந்தலை நாடி சென்ற அஞ்சிறை தும்பி-யிடம் (கொங்குதேர் வாழ்க்கை) சிவ பெருமான் வினவியதின் பொருள் தெரிய வேண்டும். ஏனெனில் இங்கு எழுத்துலகில் பாட்டு பாடி பேர் வாங்கிய எழுத்தாளர்களை விட...பாட்டில் குற்றம் கண்டுபிடிக்கும் புலவர்கள் (நக்கீரர்கள்) தான் அதிகம். அதலால் நீங்க சொல்ல வரும் கருத்தின் பொருளை புரிந்து எழுத வேண்டும். 

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் முன்பே எல்லா சூழ்நிலைகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். அந்த இலக்கினை தாண்டி யாரும் எழுதி விட முடியாது. இருந்தாலும் அதற்கடுத்து வந்த கவிஞர்கள் எல்லாம் அதே சூழல்களில் ஆனால் தங்களின் தனி பாணியில் எழுதுகின்றனர். அது போல உங்களுக்கும் சில விசயங்களில் உங்களின் "அறியும் திறன்" மற்றும் உங்களின் "சமுக பார்வை" மற்றவரிடம் இருந்து வேறு பட்டு இருக்கலாம். அதை கடை பிடித்து எழுதலாம். நீங்கள் செய்யும் செயல்களே உங்களுக்கு முகவரியாக இருக்கும்.

அடுத்து எழுதிய உடனே உங்களுக்கு சரியான அங்கீகராம் கிடைக்காது. உண்மையை எடுத்துரைத்த கலிலியோ-வை முட்டாள் என்று தான் ஆரம்பத்தில் சொன்னார்கள். ஒரு முறை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பள்ளி விழாவிற்கு கவிதை சொற்பொழிவாற்ற சென்றிருந்தார். அப்பொழுது ஒரு மாணவன் எழுதிய கவிதையை கண்ணதாசன் வாசித்து காட்டினார். அங்கே பலத்த கரகோஷம் எழுந்தது. பிறகு தான் எழுதிய கவிதையை அதே மாணவனிடம் சொல்லி வாசிக்க சொன்னார். அந்த மாணவன் கவிஞரின் கவிதையை வாசித்த பிறகு...கேட்டு கொண்டிருந்த பார்வையாளர்கள் அமைதியாக இருந்தனர். அதன் பிறகு கவிஞர் எழுந்து உண்மையை சொன்னார்....தான் வாசித்த கவிதை மான்வனுடையது அதற்கு பாராட்டு கிடைத்தது, ஆனால் அந்த மாணவன் வாசித்த கவிதை என்னுடையது அதற்கு பாராட்டு கிடைக்க வில்லை. இங்கு எல்லோரும் யார் பேசுகிறார் என்று தான் கவனிக்கிறது அவர் என்ன பேசுகிறார் என்று கண்டு கொள்வதில்லை.


அது போல எதையும் கண்டு கொள்ளாமல் எழுதி கொண்டிருங்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு நாளில் நீங்கள் கவனிக்க படுவீர்கள். முதலில் நான் முக நூலில் எழுத ஆரம்பித்தேன், நாலு அஞ்சு லைக் கிடைக்கும். மற்றவர்களின் மொக்கையான ஸ்டேட்டஸ் மற்றும் ஷேரிங்-க்கு கிடைக்கும் லைக் கூட எனக்கு கிடைக்காதது கொஞ்ச பீலிங்கா இருக்கும். அதன் பிறகு நான் கூகுள் வலைதளத்தில் எழுத ஆரம்பித்து இருக்கிறேன். இன்று எனது வலைத்தளம் நமது தமிழ் மக்களால் உலகின் பல நாடுகளிலிருந்து பார்வையிட பட்டுள்ளது என நினைக்கும் போது சற்று மகிழ்ச்சியாக இருக்கிறது (As per Blogger audience views)

முக நூலில் உங்களுக்கு நூற்று கணக்கான நண்பர்கள் இருப்பார்கள்..அவர்கள் போடும் ஸ்டேட்டஸ் மற்றும் ஷேரிங், பிறகு நீங்கள் லைக் செய்திருந்த பக்கங்களில் இருந்து வரும் தகவல்கள், நீங்கள் ஃபாலோ பண்ணும் நபர்களின் செய்திகள், ஃபேவரைட் பேஜஸ் மற்றும் நீங்கள் சேர்ந்துள்ள குருப் மெசேஜ்-கள் என்று ஒரு மணி நேரத்துக்குள் பத்திற்கும் மேற்பட்ட போஸ்ட் பார்க்க வேண்டியது இருக்கும். நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து தடவையாது பேஸ் புக் வந்தால் தான் எல்லா போஸ்டும் படிக்க முடியும், இல்லையெனில் நீங்கள் பார்க்க வேண்டியவை சுருக்க பட்டு விடுகிறது. பேஸ் புக் நிறுவனம் நடத்திய ஆய்வில்...60% நபர்கள் சாட்டிங் செய்ய தான் வருகிறார்கள். எனவே இந்த முக நூல் தளத்தில் நீங்கள் பொறுமையாக எந்த செய்தியையும் படிக்க இயலாது. மேலும் எந்த நேரத்திலும் உங்கள் முக நூல் கணக்கு முடக்க படலாம் அல்லது முக நூலே முடங்கி விடலாம் (சில நாடுகளில் தடை விதிக்க பட்டுள்ளது). அதற்கு பதிலாக உங்களுக்கு எழுதுவதில் ஆர்வமிருந்தால்...கூகுள் வலைத்தளம் ஆரம்பித்து எழுதலாம். இங்கு வந்து நீங்கள் படிப்பது ஒரு நூலகத்தில் படிப்பது போன்ற உணர்வை தரும்.

நீங்கள் எழுதுவதாக இருந்தால் தமிழ் மொழியிலே எழுத ஆரம்பியுங்கள். ஏனெனில் பயன் பாட்டில் இல்லாத ஹீப்ரு, பாரசீக மொழிகள் போன்று இன்று உள்ள ஆங்கில மோகத்தால் தமிழ் மொழியும் தொலைந்து விடலாம். இப்பொழுது எல்லா தகவல் பரிமாற்றங்கள் இணையத்தின் வழி நடகின்றது மற்றும் உலக மக்கள் அனைனவரும் இணையத்தினை பயன்படுத்துகின்றனர். ஆதலால், நமது மொழி அழிந்து விடாமல் வளர்க்க இணையத்தினை பயன் படுத்தலாம். (இந்திய பிராந்திய மொழிகளில் இணையத்தில் அதிகமாக தமிழ் பயன்படுத்த படுகிறது). அதற்காக ஆங்கிலம் தேவையில்லை என்று சொல்ல வரவில்லை. நமக்கு தேவையான் இடங்களில் வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்பிற்கு ஆங்கிலம் பயன்படுத்துங்கள்.

நான் "மறதி" என்ற தலைப்பில் முதல் பதிவினை முக நூலில் சற்று வேடிக்கையாக எழுதினேன். பிறகு என்னவென்று தெரியவில்லை...எழுதுவதில் ஒரு ஆர்வம் ஏற்பட்டு எழுதி கொண்டு இருக்கிறேன். ஒரு செயலை ஆரம்பிப்பது பெரிய விஷயம் இல்லை...அந்த செயலுக்கு முற்று புள்ளி வைக்காமல் தொடர்ந்து செய்வது சற்று கடினமான விஷயம். பொதுவாக வர்த்தகத்தில் டிசம்பர் மாதம் ஆப் சீசனாக இருக்கும்...அலுவலகத்தில் ஓய்வு கிடைக்கும் (அன் தே நெட்...ஆப் தே வொர்க்) இணையத்தில் கொஞ்ச பதிவுகள் எழுதினேன். தற்போது ஜனவரி பிறந்து விட்டதால் வேலை கொஞ்சம் பிஸியாகி விடும். நிலைமை வைஸ் வெர்சா தான் (ஆப் தே நெட்...அன் தே வொர்க்). இருந்தாலும் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எழுதி கொண்டிருக்கிறேன். அரசியல் சமுக பிரச்சனை பற்றி எழுதினால்....ரெம்ப போர் அடித்து விடும். அதனால் நினைத்தாலே இனிக்கும் மற்றும் நையாண்டி என்று சில பதிவுகளை தொடர்களாக எழுதி வருகிறேன். 

மேலும் தங்கலிஸ் என்ற தலைப்பில் தமிழ் வழியாக ஆங்கிலம் தெரிந்து கொள்வது பற்றி எழுதலாம் என்று ஒரு ஆவல். நான் ஆங்கிலத்தில் கொஞ்ச அரை குறை தான். ஒரு முறை நான் பணி புரியும் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது என்னுடைய இயக்குனரிடம்....ஏற்றுமதி செய்த ரிப்போட்டை காண்பித்து நின்று கொண்டிருந்தேன். அந்த ரிப்போட்டில் தவறு இருப்பதை கண்டுபிடித்து.....ஷிட் (shit) என்று ஆங்கிலத்தில் கூற உடனே நான், சிட் (sit) என்று சொல்லி நம்மை உக்கார தான் சொல்கிறார் என்று அவர் முன்னே உக்கார்ந்து விட்டேன். பிறகு கோபமா பார்த்து முறைச்சுட்டாறு. இப்படி இங்கிலீஷ் புரியாமல் நிறைய இடத்தில பல்பு வாங்கி இருக்கேன். பத்தாம் கிளாஸ் படிக்கும் போது....ஜாக்டவ் (திருட்டு காகம்) என்ற எஸ்ஸே மற்றும் லோட்டஸ் என்ற மெமோரி போயம் மட்டும் தெரிஞ்சு வசுகிட்டு இங்கிலீஷ்-ல பாஸ் பண்ணியாச்சு. பிறகு பாலிடெக்னிக் படிச்சு வேலைக்கு வந்த இடத்துல தான் மத்தவங்க பேசுறது வச்சு...கொஞ்ச கொஞ்சமாக தெரிஞ்சுகிட்டேன். இன்னும் சரியா பிரிப்போசிஷன் (இன், அட், பை) பயன் படுத்துறதுன்னு தெரியாது. பொதுவா நமது நண்பர்களுக்கு ஆங்கிலம் சொல்லி தர வேண்டியதில்லை என்றாலும்...என்னைய மாதிரி இருக்கும் பசங்களுக்கு கொஞ்ச சொல்லி தரலாம் என்ற சிறு முயற்சி...நானும் கற்று கொண்டு எழுதிகிறேன். (என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம் - பிற்குறிப்பு கொசுறு II படிக்கவும்)

இன்னொரு விஷயம், பொதுவா இப்படி சமூக வலைதளங்களில் எழுதுறவங்களை....வேலையில்லாத ஆளுங்க என்று சில பேர் நினைப்பதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், எனக்கு தெரிஞ்சு எழுதுறவங்க அனைவரும் பிஸியான பெர்சன்ஸ் தான். கொஞ்ச பேஸ் புக், டிவிட்டர் பக்கம் தேடி பாருங்க....நம்ம மோடி, கேஜ்ரிவால், அருண் ஜெட்லி போன்ற அரசியல் வாதிகளும், கலை, மருத்துவ துறை மற்றும் உயர் அரசாங்க பதவியில் இருப்பவர்கள் பல பேர் எழுதி கொண்டு தான் இருக்கின்றனர். அட..நம்ம கலைஞரை கூட பாருங்க, ஆளு வச்சு கூட டெய்லி பேஸ் புக்-ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாரு. (காங்கிரஸ் கூட்டனியிலிருந்து வெளியேறிய தி.மு.க-வை பார்த்து EVKS இளங்கோவன் சொன்னாரு...."காங்கிரசை பிடித்த சனி வெளியேறி விட்டது" என்று, அதற்கு முரசொலியில் கலைஞர் எழுதினாராம் "என்னது...காங்கிரசை விட்டு இளங்கோவன் வெளியேறி விட்டாரா என்று). இவ்வாறு எல்லா பிரபலங்களும் எழுதி கொண்டு தான் இருக்கின்றனர். 

எனவே...நீங்களும் கொஞ்ச நேரம் கிடைக்கும் போது எழுத ஆரம்பிங்க...வாழ்த்துக்கள். 

பதிவின் நீளம் அதிகமாகிடுச்சு...மன்னிக்கவும் இத்துடன் முடித்து கொள்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்.

எஸ். ரெங்க ராஜன். 

கொசுறு I: திருவிளையாடல் பாடலில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணமிருக்கிறதா இல்லையா என்பதற்கு மேலே சொன்ன கொங்குதேர் வாழ்க்கை பாடலை சிவ பெருமான் எழுதி தருமிடம் தருவார். அந்த பாடலில்...பெண்களின் கூந்தலை பற்றி குறிப்பிடும் போது "அரிவை கூந்தல்" என்று சொல்லிருப்பார். "அரிவை" என்பது...பெண்ணின் ஐந்தாவது பருவம் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்)...ஆகவே "அரிவை" பருவம் என்றால்..நாற்பது வயது பெண்ணை குறிக்கும் என நினைக்கிறேன். அப்படியென்றால்...அதற்கு முந்தைய பருவ பொண்ணுங்க கூந்தலுக்கு மனமில்லை என்று தானே பொருள் படுகிறது. அது எனக்கு சரியா தெரியல.....பொதுவா பொண்ணுங்க கூந்தலில் மணமிருக்கா இல்ல ஈறு பேணு இருக்கானு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும்...ஆண் என்றாலும் சரி....பெண் என்றாலும் சரி, ஒருவரின் உண்மையான உச்சகட்ட அழகு வெளிபடுவது நாற்பது வயதில் தான். நம்ம நடிகர் விஜயை பாருங்கள் தெரியும். அப்ப இருக்கும் நாளைய தீர்ப்பு படத்தில் பார்ப்பதற்கும்...இப்ப இருக்கும் படத்தில் வருவதற்கும். விஜய் மட்டுமல்ல...அஜித், கமல், அர்ஜுன போன்ற நடிகரும் நாற்பது வயதில் தான் வசீகரமாக தெரிவார். உங்க அம்மா அப்பா கல்யாண போட்டவையும்...அடுத்து நாற்பது வயசு போட்டவையும் பாருங்க தெரியும். ஏனெனில் அந்த பருவம் தான்..ஓடி ஓடி உழைத்து, பிரச்சனைகளை எதிர் கொண்டு, பல அனுபவங்களை பெற்று முதிர்ச்சி அடைந்த பருவம். அதற்கடுத்து ஒய்வு வந்து விட்டால்..பழைய முக பொலிவு போய் விடும். உழைத்து கொண்டே இருங்கள்...அழகாக தெரிவீர்கள்

கொசுறு II: இந்த ஆங்கிலத்தில் அடிப்படையா "ஆர்ட்டிகிள்" என்ற பயிற்சி இருக்கும். அதாவது....ஆங்கில வவ்வல்ஸ் (ஆங்கில உயிரெழுத்து - a, e, i, o, u) முன்னே "an" போட வேண்டும். இதன் படி...Unmberla & University - இரண்டுமே "U" ல ஆரம்பிக்கும் சொற்கள். ஆனால் Umberla என்ற சொல்லுக்கு "an" போடுகிறோம் ஆனால் University என்று சொல்லுக்கு "a" போடுகிறோம். அது போல முரணாக...hour என்று "h" ல ஆரம்பிக்கும் சொல்லுக்கு "an" போடுகிறோம்.....இதற்கு காரணம் என்ன வென்று தெர்யுமா....எல்லாம் தமிழ் மொழி தான் காரணம். தமிழ் உயிரெழுத்து ("அ" முதல் "ஔ" வரை) ஓசையை கொண்டு ஒலிக்கும் ஆங்கில சொல்லுக்கு "an" போட வேண்டும். உதாரனமாக ""லிபென்ட் (elephant) என்ற சொல்லுக்கு "an" போடணும். மறுபடியும் மேலே சொன்ன சொற்களை  பாருங்கள்....""ம்பர்லா ("அ" உயிரெழுத்து an போடுகிறோம்), "யுனிவர்சிட்டி" (யு - உயிர் மெய் எழுத்து - an போடவில்லை, a போடுகிறோம்), இதே போல....Hour என்ற சொல்லில் ""வர் ("அ" உயிரெழுத்து an போடுகிறோம்). தெரிஞ்சுகோங்க இங்கிலீஸ் காரனே நம்ம மொழிய பயன்படுத்தி தான் டெவலப் பண்றான். இனிமேலாட்சும் ட்யுட், வன்னா, கொன்னா, வாட்ஸ் அப், ஆசாம் என்று பீட்டர் விடாதீங்க